டெல்லி: இந்தியாவில், தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சார்க் நாடுகளின் ஒப்பந்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் அமையவுள்ளது. சார்க் அமைப்பின் சார்பில் இந்தப் பல்கலைக்கழகம் நிர்மானிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சார்க் நாடுகளுக்கிடையே ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், இதுகுறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிருத்விராஜ் செளகான் செய்தியாளர்களிடம் பேசுகையில், சார்க் அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்தப் பல்கலைக்கழகம் உதவும். இது மிகப் பெரிய நிகழ்வாகும்.
சார்க் பிராந்தியத்தில் நிலவும் கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறனை உலகுக்கு பறை சாற்ற இந்த பல்கலைக்கழகம் பெரும் உதவியாக இருக்கும்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் எல்லை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்தியாவுக்கு வெளியே சார்க் நாடுகளில் இதன் வளாகங்கள் மற்றும் மையங்கள் அமைக்கப்படும்.
பல்கலைக்கழகத்தின் முதல் கூட்டம் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.
இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் டாக்காவில் நடந்த சார்க் மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
இதையடுத்து 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் நடந்த சார்க் மாநாட்டின்போது, இதுதொடர்பாக சார்க் நாடுகளின் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில், இந்திய அரசால் அமைக்கப்படும் முதல் சர்வதேச பல்கலைக்கழகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்கலைக்கழகம் முற்றிலும் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கும் என்றார் அவர்.