காலை வாரிய 'சீயான்'... கைகொடுத்த 'தல'!
புதன்கிழமை, நவம்பர் 4, 2009, 18:41 [IST]
யாவரும் நலம் என்ற சுமார் படத்தை எடுத்த இயக்குநர் விக்ரம் குமாரும் நடிகர் விக்ரமும் இணைவதாக அறிவிக்கப்பட்ட படம் 24. ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் முன்பே இயக்குநருக்கும் நடிகருக்கும் முட்டிக் கொண்டது. விளைவு படத்தையே ட்ராப் பண்ணுகிறேன் என்று முறைத்துக் கொண்டு போய்விட்டார் இயக்குநர் விக்ரம் குமார்.
இன்னொரு பக்கம், இழுத்தடிப்புக்குப் பெயர் போன செல்வராகவனின் புதிய படத்தில் நடிக்க லடாக் போய் விட்டார் சீயான்.
இதில் மாட்டிக் கொண்டவர் தயாரிப்பாளர் மோகன் நடராஜன்தான். என்ன செய்வது என்று யோசித்தவருக்கு சட்டென நினைவில் மின்னியவர் தல அஜீத்தான்.
ஏற்கெனவே இருவரும் ஆழ்வார் படத்தில் இணைந்தவர்கள்தான். ஆழ்வார் தந்த தோல்வியை சரிகட்டும் விதமாய் மீண்டும் ஒரு படம் நடித்துத் தருவதாக 'தல' உறுதியளித்திருந்தாராம் மோகன் நடராஜனுக்கு. அதை நினைவுபடுத்தி கால்ஷீட் கேட்கலாம் என அஜீத்துக்கு போன் போட்டாராம்.
நினைவூட்டலுக்கு அவசியமே இல்லாமல், கால்ஷீட் கொடுக்க சம்மதித்தாராம் அஜீத்.
இப்போது 24 படம் புதிய தலைப்புடன், அஜீத் நாயகனாக நடிக்க உருவாகவிருக்கிறது.
விக்ரமால் பாதிக்கப்பட்ட மோகன் நடராஜன், இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் விக்ரம் மீது புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார் என்பதுதான் ஹாட் செய்தி!