முன்னாள் குத்து ரம்யாவான இந்நாள் திவ்யா, வாரணம் ஆயிரம் படத்தைத் தொடர்ந்து அடுத்து 'காதல் 2 கல்யாணம்' என்ற வித்தியாசமான படத்தில் நடிக்கவுள்ளார்.மணிரத்தினத்தின் முன்னாள் உதவியாளரான மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகன், புதுமுகம் ஷஹிர்.
ஓகனேக்கல் விவகாரத்தில் கன்னடத் திரையுலகினர் தமிழ்த் திரையுலகினரைக் கண்டித்து போட்டி உண்ணாவிரதம் நடத்தியபோது அதில் முதல் ஆளாக கலந்து கொண்டவர் திவ்யா. இதற்காக அவருக்கு நடிகர் சங்கம் ரெட் கார்டு போட்டது.
தமிழில் அவர் நடிக்க முடியாது என்றும் கூறப்பட்டது. இருப்பினும் தனது நிலையை விளக்கி திவ்யா நடிகர் சங்கத்திடம் கடிதம் கொடுத்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகர் சங்கம் பச்சைக் கொடி காட்டியது.
இதையடுத்து திவ்யாவுக்கு தமிழ்ப் பட வாய்ப்புகள் வழக்கம் போல சீரும், சிறப்புமாக வந்து கொண்டிருக்கிறது.
வாரணம் ஆயிரம் படம் சிறப்பாக ஓடுவதால் சந்தோஷமாகியுள்ள திவ்யா, காதல் 2 கல்யாணம் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளாராம்.