சனிக்கிழமை, நவம்பர் 7, 2009, 15:19 [IST]
பாப் ஸ்டார் மடோனா, மலாவியில் தொடங்கத் திட்டமிட்டுள்ள மகளிர் அகாடமிக்கு எதிராக அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்யப் போவதாக மலாவி அரசு எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான மலாவியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மகளிர் அகாடமியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் மடோனா.
இந்த அகாடமி 13.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படவுள்ளது. கடந்த மாதம் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆனால் இதற்காக தங்களிடமிருந்து எடுக்கப்பட்ட நிலத்திற்குக் கூடுதல் பணம் கேட்டு 140 கிராமத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து நிலத்தைப் பெற்ற மலாவி அரசு இதை 99 ஆண்டு குத்தகைக்கு மடோனாவுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக கிராம மக்களுடன் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து போராட்டத்தை கிராமத்தினர் கைவிடாவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.