ஸ்ரீகாந்த்-நவ்யா நாயர் நடிப்பில் உருவாகும் ரசிக்கும் சீமானே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.வழக்கமாக இம்மாதிரி விழாக்களை ஏதாவது ஒரு அரங்கில் வைத்து நடத்துவார்கள். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் சற்று வித்தியாசம் விரும்பி. அதனால் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் வைத்தே எளிமையாக பாடல்களை வெளியிட வைத்தார்.
டிரான்ஸ் இந்தியா சார்பில் பிஆர் திருமலை தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர் எட்டப்பன். ஆனால் இந்தப் பெயருக்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிப்பு கிளம்பியதால், எதற்கு வம்பு என்று ரசிக்கும் சீமானே என மாற்றிவிட்டார்கள்.
இதுகுறித்து இயக்குநர் வைத்தியநாதன் கூறுகையில், நாம சண்டை போடவோ, யாரையும் புண்படுத்தவோ படமெடுக்க வரவில்லை. நல்ல பொழுதுபோக்குப் படத்தை ரசிக்கும் விதத்தில் தரவேண்டும். அந்த நோக்கத்தை இந்தப் படத்தில் சரியாகச் செய்திருக்கிறேன், என்றார்.
இப்படத்துக்கு 5 வித்தியாசமான பாடல்களைக் கொடுத்துள்ளாராம் விஜய் ஆண்டனி. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் பேரரசு, எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனநாதன் பேசும்போது, நாக்க மூக்கா... என்ற அர்த்தமில்லாத வார்த்தைகளைக்கூட பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கிவிட்ட பெருமை விஜய் ஆண்டனியைச் சேரும் எனப் பாராட்டினார்.
பேரரசு, ஸ்ரீகாந்த் ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே, திருமலை போன்ற புதிய தயாரிப்பாளர்கள் வந்தால்தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும் எனப் பாராட்டினர்.
இந்த பாராட்டில் மகிழ்ந்துபோய் அடுத்த படத்துக்கு இப்பவே அட்வான்ஸ் கொடுக்கத் தயாராகிவிட்டாராம் திருமலை!