Oneindia Mobile
Todays Top Searches- Get here NOW!
ஆஸ்கருக்கு 'தாரே ஜமீன் பர்'
Sunday, September 21 2008

81வது ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், இந்தியாவின் சார்பில் ஆமிர்கான் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான தாரே ஜமீன் பர் பங்கேற்கிறது.

8 வயது டிஸ்லெக்ஸிக் சிறுவனின் உணர்ச்சிப் போராட்டம்தான் தாரே ஜமீன் பர் படத்தின் கதை. ஆமிர்கானின் முதல் இயக்கத்தில் உருவான படம். சிறுவன் தர்ஷீலின் சிறப்பான நடிப்பால் படம் உயிரோட்டத்துடன் அமைந்தது. பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்திய படம் தாரே ஜமீன் பர்.

தமிழ், தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 81வது ஆஸ்கர் விருதுப் போட்டியில், வெளிநாட்டுப் படப் பிரிவில் இந்தியா சார்பில் தாரே ஜமீன் பர் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது.

இந்திய திரைப்பட சம்மேளனத் தலைவர் சுனீல் தர்ஷன் இத்தகவை அறிவித்தார்.

அமோல் குப்தேவின் கதையில் உருவான தாரே ஜமீன் பர், 2007ம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் ரூ. 131 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது.

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், தாரே ஜமீன் பர் தவிர மராத்தி படங்களான வாலு, திங்க்யா, நிஷிகாந்த் காமத்தின் மும்பை மேரி ஜான், நீரஜ் பாண்டேவின் ஏ வெட்னஸ்டே, அசுதோஷ் கோவரிகரின் ஜோதா அக்பர், பர்ஹான் அக்தரின் ராக் ஆன், சுபாஷ் கய்யின் பிளாக் அன்ட் ஒயிட், தெலுங்குப் படமான கான்யம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஆமிர்கான் கான் படம் ஒன்று ஆஸ்கருக்குப் போவது இது இரண்டாவது முறையாகும். முன்பு அவரது சொந்த தயாரிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற லகான் ஆஸ்கருக்குப் போனது. இறுதிப் போட்டி வரை அது முன்னேறி புதிய சாதனையும் படைத்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் ஒரு நடிகரின் படம் அதிக அளவுக்கு ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமை, கமல்ஹாசனுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.