Oneindia Mobile
மும்பை கடல் பாலத்தில் ஷூட்டிங் நடத்த தினசரி வாடகை ரூ. 1 லட்சம்
சனிக்கிழமை, ஜூலை 4, 2009, 15:36 [IST]



Mumbai sea link
மும்பையில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கடல் பாலத்தின் மீது படப்பிடிப்பு நடத்த ரூ. 1 லட்சம் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டமான பாலம் ஏதாவது கட்டப்பட்டால் அது மக்களை விட சினிமாக்காரர்களுக்குத்தான் ரொம்ப பயன்படும். அந்த வகையில் சமீபத்தில் மும்பையில் ஒர்லிக்கும், பந்த்ராவுக்கும் இடையே திறந்து வைக்கப்பட்ட பிரமாண்ட கடல் பாலத்தையும் இப்போது சினிமாக்காரர்கள் குறி வைத்துள்ளனர்.

இதையடுத்து இந்தப் பாலத்தின் மீது படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப் போகிறார்களாம். ஒரு நாளைக்கு இந்தப் பாலத்தின் மீது படப்பிடிப்பு நடத்த வாடகை ரூ. 1 லட்சமாம்.

இது பிற முக்கியப் பகுதிகளை விட வாடகை குறைச்சல்தானாம். கேட்வே ஆப் இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த தற்போது ஒரு நாளைக்கு ரூ. 1.25 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அதுவே சிஎஸ்டி (சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்) படப்பிடிப்பு நடத்த ஒரு நாளைக்கு ரூ. 90 ஆயிரம்தான்.

படப்பிடிப்புக்கான கட்டணம் தொடர்பாக அரசு நிர்ணயித்துள்ள புதிய கட்டண விகிதப்படி, பந்த்ரா பிராமினேட், சீ ராக் ஹோட்டல் மற்றும் கடல் பாலத்தின் பின்னணியில் உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த ஒரு நாள் வாடகை ரூ. 50 ஆயிரம் ஆகும்.

மும்பை கடல் பாலத்தை படப்பிடிப்புக்கு அனுமதிக்குமாறு ராம் கோபால் வர்மா, கரன் ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்கள் அரசை அணுகினர். ஆனால் ஆரம்பத்தில் இதற்கு அரசு அனுமதி மறுத்ததாம். ஆனால் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் அனுமதி கோரி கியூவில் நிற்க ஆரம்பித்ததால் இப்போது வாடகைக்கு விட அரசு அனுமதித்துள்ளதாம்.

இனிமேல் எல்லோரும் கேட்வே ஆப் இந்தியா, சிஎஸ்டி ஆகியவற்றிலிருந்து கடல் பாலத்திற்கு மாறி விடுவார்கள் என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

இருந்தாலும், மும்பை என்று காட்ட வேண்டுமானால் அது சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தைக் காட்டினால்தான் பொருத்தமாக இருக்கும். அதை மாற்றவே முடியாது என்கிறார் இன்னொரு தயாரிப்பாளர்.

நம்ம ஊரில் சென்னை என்றால் எல்.ஐ.சி பில்டிங்கையும், சென்டிரல் ரயில் நிலையத்தையும் காட்டுவது போல...!



»Home  »Tamil  »News  »Movies  »Font Help  »Sitemap 

© Greynium Information Technologies Pvt. Ltd.