Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
பொய் சொன்ன ஆயா சஸ்பெண்ட்!
Wednesday, August 20 2008

சென்னை: அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு பெண் குழந்தையை ஆண் குழந்தை என்று கூறி குழப்பம் விளைவித்த அரசு மருத்துவமனை ஆயா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் மனைவி சோனியா. சோனியாவின் தலைப் பிரசவத்துக்காக அவரை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி (கோஷா) மருத்துவமனையில் அவரது தாயார் உஷா சேர்த்தார். நேற்று காலை 11.45 மணிக்கு சோனியாவுக்கு சுகப் பிரசவம் ஆனது.

அப்போது பிரசவ வார்டில் இருந்து ஆஸ்பத்திரி பெண் ஊழியர், குப்புசாமி மற்றும் சோனியாவின் தாயார் உஷாவிடம், சோனியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே 600 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

அதைக் கேட்ட அவர்கள் கையில் 200 தான் இருக்கிறது என்று கூறி அதைக் கொடுத்துள்ளனர். மேலும் உறவினர்கள், குடும்பத்தினர், தெரிந்தவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உஷா பிரசவ வார்டுக்குப் போனபோது அங்கு தனது மகளுக்கு அருகில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆயா, ஆண் குழந்தை என்றாரே என்று குழம்பினார்.

ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று எங்களிடம் கூறினார்கள், ஆனால் நீ பெண் குழந்தையை வைத்திருக்கிறாயே? என்று மகளிடம் கேட்டார்.

இதையடுத்து மருத்துவமனையின் மகப்பேறியல் இயக்குநர் வசந்தாவிடம் புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் அங்கு உஷாவின் உறவினர்களும் வந்ததால் பெரும் பரபரப்பானது.

தகவல் போலீஸாருக்குப் போக அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆயா, பணத்துக்கு ஆசைப்பட்டு பெண் குழந்தையை ஆண் குழந்தை என்று கூறியது தெரிய வந்தது.

இதையடுத்து அனைவரிடம் மன்னிப்பு கேட்ட ஆயா, வசந்தா, உஷா, குப்புசாமியின் காலில் விழுந்து மன்னித்து விடுமாறு கோரினார். இருப்பினும் அவரது பொய்யால் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டதால் ஆயாவை சஸ்பெண்ட் செய்து டாக்டர் வசந்தா உத்தரவிட்டார்.

இருப்பினும் குழந்தை மாற்றப்பட்டிருக்குமோ என்று குப்புசாமியும், உஷாவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இதில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கிறோம். பிறந்த குழந்தையை காட்டுவதற்கு 5 மணி நேரம் கழித்தே அனுமதித்தனர் என்றார்.

ஆனால் குழந்தை மாற்றம் எதுவும் நடக்கவில்லை. ஆண் குழந்தை பிறந்த தகவலைச் சொல்லி 600 ரூபாயும், பெண் குழந்தை பிறந்த தகவலைச் சொல்லி 200 ரூபாய் வாங்குவதும் இங்குள்ள ஆயாக்களின் வழக்கம். எனவே பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த ஆயா பெண்ணை ஆணாக்கி விட்டார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

தனக்கு பெண் குழந்தைதான் பிறந்தது என்பதை சோனியா கூறியுள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொள்ள மறுத்து வருவதால் சர்ச்சை நீடித்து வருகிறது.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.