Oneindia Mobile
Super Song Lyrics Directory- Get here!
புலிகளை 'மறக்கவில்லை-மன்னிக்கவில்லை'
Sunday, October 26 2008

சென்னை: ராஜிவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமானவர்களை காங்கிரஸ் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை என மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் வாசன் கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 1991ம் ஆண்டு நடந்த ராஜிவ் காந்தியின் கொடூரமான கொலையை நாட்டு மக்கள் மறக்கவில்லை. தேசத்திற்கும், காங்கிரசுக்கும் அது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இதற்கு காரணமானவர்களை காங்கிரஸ் மறக்கவுமில்லை, மன்னிக்கவுமில்லை.

இலங்கையில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அவர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை அனுப்பவும், போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் மோதலுக்கும், இலங்கை தமிழர் உரிமை பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை என இந்திய அரசு கூறியிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

வைகோ கைது செய்யப்பட்டதை பொறுத்தவரை, சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது. தொடர்ந்து இவ்வாறு பிரிவினை பேச்சு, தனித் தமிழ்நாடு, ஆயுதம் ஏந்துவோம் என்பவர்கள், பொதுச் சொத்துக்கு பங்கம் விளைவிப்பவர்கள், தலைவர்களின் சிலைக்கு சேதம் விளைவிப்போர், வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றார்.

பாரதிராஜாவையும் கைது செய்ய கோரிக்கை:

இதற்கிடையே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், ராம. நாராயணன், நடிகர் மன்சூர் அலி கான் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவர்களது கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்தையும் காங்கிரஸ் துவக்கியுள்ளது.

ஈரோட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ விடியல் சேகர் தலைமையிலும், செங்கத்தில் எம்எல்ஏ போளூர் வரதன் தலைமையிலும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

திருக்கோவிலூரில் எம்எல்ஏ சிவராஜ் தலைமையில் பாரதிராஜா உள்ளிட்டவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.