நியூயார்க்: பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ள சிட்டி வங்கிக்கு அமெரிக்க அரசு வரலாறுகாணாத வகையில் 306 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன் வந்துள்ளது.இந்த வங்கியின் பங்குகள் விலை 83 சதவீதக்குக்கு மேல் சரிந்துவிட்ட நிலையில், வங்கியை விற்றுவிடுவது அல்லது வேறு வங்கியுடன் இணைந்துவிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் அமெரிக்க அரசு இந்த உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஏற்கனவே இந்த வங்கிக்கு கடந்த மாதம் அமெரிக்க அரசு 25 பில்லியன் டாலர்கள் வழங்கியது. ஆனால், அதெல்லாம் போதவில்லை.
இதையடுத்து வரலாறு காணாத வகையில் 306 பில்லியன் டாலர் உதவியை இந்த வங்கிக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.
சுமார் 100 நாடுகளில் கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளும் சொத்துக்களும் உள்ளன.
இப்போதைய அரசு நிதியுதவி மூலம் சிட்டி வங்கியின் 90 சதவீத நஷ்டம் ஈடுகட்டப்பட்டுவிட்டது. மீதமுள்ள 10 சதவீத நஷ்டத்தை அந்த வங்கியே தனது சொத்துக்களை வைத்து சமாளிக்கவுள்ளது.
தப்பினார் வி்க்ரம் பண்டிட்:
இந்த நிதியுதவி மூலம் சிட்டி வங்கியின் தலைவர் விக்ரம் பண்டிட்டின் பதவியும் தப்பியுள்ளது. அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பண்டிட் உள்ளிட்ட டாப் சிட்டி வங்கி நிர்வாகிகளின் ஊதியம், போனஸ்களை பெருமளவில் குறைக்க அரசு உத்தரவிடும் எனத் தெரிகிறது.