Wednesday, November 26 2008
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல் அணி வகுப்பு போல தோன்றுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கோடு தமிழக அரசு அக்டோபர் 14, 2008 அன்று கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொண்டது. அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய அரசு ராஜீயரீதியாக தலையிட்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி - பேச்சு வார்த்தை மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயல வேண்டும்.
பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச செஞ் சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலமாக உணவு - மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்திட வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்:
போன்ற பல அம்சங்களை வலியுறுத்தி நடத்தப்பட்ட மனித சங்கிலி இயக்கத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றது.
மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் தனது பங்களிப்பை செலுத்தியது. மாநிலம் முழுவதும் அம்மக்களுக்கான உணவு மற்றும் மருந்து உதவிக்கான நிதி வசூலுக்கு மக்கள் பேராதரவு அளித்தனர்.
உணவு மற்றும் மருந்து பொருட்கள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதி மக்களாலும் வரவேற்கப்பட்ட இத்தகைய பணிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
இதற்கு மாறாக, ஒரு சில அரசியல் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், 25.11.2008 அன்று தமிழக முதல்வர் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் துயர் துடைக்க ஒன்றுபட்டு குரலெழுப்புவதற்கு பதிலாக, அரசியல் அணிவகுப்பை உருவாக்குவதற்கான ஒரு வடிவமாக திசை திரும்பி போகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளவில்லை.
எனவே, இலங்கையில் நடைபெறும் இருதரப்பு ஆயுத மோதல்களும் நிபந்தனையின்றி நிறுத்தப்பட வேண்டும் என்றும், போர் நிறுத்தம் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவா ரண நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என்றும் இதற்கு இந்திய அரசு ராஜீயரீதியில் தலையிட வேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
மேலும், தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங் கைத் தமிழ் அகதிகள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காண முடிகி றது. அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் குறைந்த பட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற தகவல்கள் வருகின்றன.
எனவே அவர்களது வாழ்க்கைக்கான பாதுகாப்பு, சுகாதாரம், குடியிருப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திட மத்திய - மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.